லீவு நாட்கள் வந்து விட்டாலே வீட்டில் இருப்பவர்கள் அடிக்கடி ஸ்நாக்ஸ் வேண்டும் என்று கேட்பார்கள். உங்கள் வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்களை வைத்தே இந்த முட்டை கோஸ் பக்கோடாவை சுவையாக சீக்கிரத்தில் செய்து விடலாம். இப்படி முட்டைகோஸ் பக்கோடா செய்தால் இது சாப்பிடுவதற்கு ருசியாகவும் இருக்கும். காய்கறி சேர்த்த ஸ்நாக்ஸ் என்பதால் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ரெசிபியாகவும் இருக்கும். சரி அந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோமா.

முதலில் ஒரு அகலமான பவுல் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் – 1 கப், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து முதலில் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.
அதன் பின்பு மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, வெண்ணெய் – 1 ஸ்பூன், பெருங்காயம் – 1/4 ஸ்பூன், இந்த பொருட்களை சேர்த்து உங்கள் கையை கொண்டு நன்றாக அழுத்தம் கொடுத்து பிசைய வேண்டும். (உங்களுடைய வீட்டில் வெண்ணெய் இல்லை என்றால் சுடச்சுட எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் அளவு ஊற்றிக் கொள்ளுங்கள்.)
முட்டைக்கோஸில் இருந்தே தண்ணீர் விடத் தொடங்கும். அதன் பின்பு மிளகாய் தூள் –1/2 ஸ்பூன், கடலை மாவு – 1 கப், அரிசி மாவு – 1/4 கப் இந்த பொருட்களை சேர்த்து மீண்டும் தண்ணீர் எதுவும் ஊற்றாமல் அழுத்தம் கொடுத்து நன்றாக பிசையுங்கள். முட்டைக்கோஸ் வெங்காயத்தில் இருந்தே தண்ணீர் விடத் தொடங்கும். இதுவே உங்களுக்கு பக்கோடா மாவு பக்குவத்திற்கு வந்துவிடும். தேவைப்பட்டால் 2 ஸ்பூன் அளவு தண்ணீரை தெளித்து அழுத்தமாக பிசைந்தால் பக்கோடா மாவு தயார்.
மாவை தண்ணீர் ஊற்றி தளதளவென பிசைந்து விடக்கூடாது. கட்டி ஆகத்தான் இருக்க வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெயை ஊற்றி சூடு செய்து கொள்ளுங்கள். எண்ணெயை மிதமாக சூடு ஆன பின்பு, இந்த மாவை கிள்ளி கிள்ளி எடுத்து எண்ணெயில் போட்டு இரண்டு பக்கமும் திருப்பி பொன்னிறம் வரும் வரை சிவக்க விட்டு எடுத்தால் சூப்பரான முட்டைகோஸ் பக்கோடா தயார்
