ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பிம்பர் காலியில் இருந்து சாங்கியோட் நோக்கி ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் அந்த வாகனத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பயங்கரவாதிகள் வீசிய குண்டுகளால் ராணுவ வாகனம் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் அப்பகுதியில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில் மற்றொரு ராணுவ வீரர் காயமடைந்து, ராஜவுரியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதிகளை கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.